உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் திரிகால்பூர் பகுதியில் வசித்து வந்தவர் திருமணமான 30 வயது பெண். இவர் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது தனது மாமனார் முகத்தில் வண்ணப் பொடிகளை தூவி விளையாடியுள்ளார். இதனை கவனித்த மாமியார் மருமகளை கண்டித்து திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மருமகள் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்து, உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொள்ள இதுதான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் ஆன இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.