Summer season: ஊட்டியில் 8 லட்சம், குன்னூரில் 2 லட்சம்! - பூக்காடாக மாறும் நீலகிரி பூங்காக்கள்
Vikatan March 18, 2025 07:48 PM

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக இருக்கிறது ஊட்டி. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் ஊட்டியில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களை திருவிழா போல நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை அதே வகையில் கோடை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மலர் நாற்று நடவு

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க முழு வீச்சில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூங்காக்களில் இறுதிகட்ட மலர் நாற்று நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மலர் நாற்றுகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்து வருகின்றனர்.

பூக்காடாக மாற இருக்கும் நீலகிரி பூங்காக்கள் குறித்து பேசிய தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, " கோடை விழாவிற்காக பூங்காக்களை பொலிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக குன்னூர் காட்டேரி பூங்காவில் ஆன்டிரைனம், பெட்டுண்யா, பால்சம், பிகோனியா, சால்வியா, ஆஸ்டர், ஜெனியா, வெர்பினா, டேலியா உள்ளிட்ட 30 வகையான மலர் ரகங்களில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் மலர் நாற்று நடவு

இதேபோல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியன்ட்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, பிரென்ச் மேரிகோல்டு, ஃபேன்சி, ஜெர்பரா, கிரைசாந்திமம், டெல்பினியம், சால்வியா, ஆந்தூரியம் போன்ற 275 வகையான மலர் ரகங்கள் மற்றும் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலில் இருந்தும் மலர்செடிகள் பெறப்பட்ட சுமார் 8 லட்சம் மலர் நாற்றுகள் நடவுபணிகளும் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான மலர் செடிகளில் ஒரே சமயத்தில் பூக்கும் கோடிக்கணக்கான பூக்களை கோடை சீசனுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் " என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.