பஞ்சாபில் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று ராணுவ அதிகாரி ஒருவர் தனது மகனுடன், தங்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாதாரண உடையில் வந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் தங்கள் காரை அங்கே நிறுத்த, ராணுவ அதிகாரியை அவரது காரை எடுக்க கூறியுள்ளனர். அவர்கள் மிரட்டலாக கூறியதால், ராணுவ அதிகாரி காரை எடுக்க மறுத்தார். இதனால் காவல்துறை அதிகாரி ஒருவர் ராணுவ அதிகாரியை குத்தியுள்ளார். இதை தடுக்க வந்த அவரது மகனையும் தாக்கியுள்ளனர். இது குறித்து ராணுவ அதிகாரியின் மகன் கூறியதாவது அவர்கள் எங்களை கம்புகள் மற்றும் கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டையால் தாக்கினர். நாங்கள் மயங்கி விழுந்தோம்.
மீண்டும் கண் விழித்து பார்த்தபோது எங்களை அவர்கள் தாக்கிக் கொண்டு இருந்தனர். குறைந்தது 45 நிமிடங்கள் அவர்கள் எங்களை தாக்கினார்கள் என்று தெரிவித்தார். மேலும் அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறினார். இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரியின் கை முறிந்தது. அவரது மகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து நாங்கள் காவல்துறையினரிடம் வழக்குப்பதிவு செய்ய முயற்சித்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களுக்கு உதவிவில்லை. எனக்கு மிரட்டல் அழைப்புகளும் வந்தது என்று அவரது மகன் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்த வீடியோ வெளியாகி கண்டனங்கள் எழுந்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மொத்தம் 12 அதிகாரிகளை காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.