நெல்லை கொக்கிரகுளம் கண்ணப்பநாயனார் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் வேலாயுதம் (28). ஆக்கி வீரரான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். மேலும் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் உள்ள மாடுகளை பராமரித்து பால் வியாபாரமும் செய்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரவி (45). இவர் கஜேந்திரனுக்கு உதவியாக அவருடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கஜேந்திரன் வீட்டில் குளியலறை கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த கட்டிடத்திற்கு தண்ணீர் நனைப்பதற்கு நேற்று காலையில் வேலாயுதம் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனை அங்கு வந்த ரவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வேலாயுதத்தை காப்பாற்ற சென்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.