முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் பகுதியைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர். அங்கு செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
இதைப்பார்த்த சக பக்தர்கள், செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.