தூத்துக்குட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனியார் நிறுவனத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அந்த பெட்ரோல் பங்க் முன்பு லாரியை திருப்ப முயற்சி செய்தனர்.
அப்போது விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியதால் காளிமுத்து அவர்களை எச்சரித்துள்ளார்.
இதனால் காளிமுத்துவுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு ஓட்டுநர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து இரவு 12 மணியளவில் பெட்ரோல் பங்குக்கு மீண்டும் வந்துள்ளனர்.
அப்போது மது போதையில் இருந்துள்ளனர். காளிமுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இருவரும் காளிமுத்துவை தூக்கத்திலேயே இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் காளிமுத்துவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஓட்டுநர்கள் கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியது தெரியவந்தது.
காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கைது செய்யும்போது, இருவரும் தப்பி ஓட முயற்சித்தனர். இதில் அவர்கள் கீழே விழுந்து இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK