“ரோந்து பணிக்காக சென்ற வன காவலர்”… காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயம்… 4 நாட்களாக சிகிச்சை பெற்றும் உயிரிழப்பு…!!
SeithiSolai Tamil March 25, 2025 12:48 AM

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உப்புத்துறை கிராமத்தில் சின்ன கருப்பன் (48) என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வனச்சரகத்தில் வன காவலராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் வனக் காவலர் சின்ன கருப்பன், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கோட்டை மலை காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காட்டு மாடு ஒன்று வனத்துறையினரை துரத்தியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வன அதிகாரிகள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். அப்போது வனகாவலர் சின்ன கருப்பனை காட்டுமாடு வேகமாக வந்து தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்ன கருப்பனை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

அங்கு கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சைவழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சின்ன கருப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு மாடு தாக்கி வன காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.