CSK vs RCB: பழி தீர்க்க நினைக்கும் சிஎஸ்கே; 16 ஆண்டு ரெக்கார்டை உடைக்க ஆர்சிபி - வெல்லப்போவது யார்?
Vikatan March 29, 2025 12:48 AM

நடப்பு சீசனின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று சென்னை Vs பெங்களூரு போட்டி. சேப்பாக்கத்தில் வைத்து சென்னையை வீழ்த்த வேண்டுமென பெங்களூரு ரசிகர்கள் விரும்புகிறார்கள். கடந்த சீசனில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென சென்னை அணியின் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பால் எல் க்ளாஸிக்கோ என வர்ணிக்கப்படும் சென்னை Vs மும்பை போட்டிக்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தப் போட்டி மாறியிருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார்? இரு அணிகளும் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

CSK vs RCB பெங்களூரு அணியின் நம்பிக்கை

இரண்டு அணிகளுமே தாங்கள் ஆடிய முதல் போட்டியில் வென்றிருக்கின்றன. சென்னை அணி தங்களின் மதிப்புமிக்க எதிரியான மும்பை அணியை வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு அணி நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு அணியிடம் இதுவரை இல்லாத குணாதிசயங்கள் அந்த முதல் போட்டியில் வெளிப்பட்டிருந்தது. குறிப்பிட்ட ஒன்றிரண்டு வீரர்களை நம்பாமல் ஒரு அணியாக செயல்பட்டு வென்றிருந்தனர். பேட்டிங்கில் பில் சால்ட், கோலி, ரஜத் பட்டிதர் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர்.

க்ரூணால் பாண்ட்யா, ஹேசல்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் நன்றாக வீசியிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேல் போட்டியில் ஆங்காங்கே சறுக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு வரவும் செய்திருந்தனர். நரைனும் வருண் சக்கரவர்த்தியும் தான் அந்த அணியின் உயிர்நாடி. அதை புரிந்துகொண்டு அவர்களை ஜாக்கிரதையாக அதேநேரத்தில் அட்டாக்கிங்காகவும் ஆடினர். அவர்கள் வீசிய 8 ஓவர்களில் 70 ரன்களை எடுத்திருந்தனர். அவர்கள் இருவரையும் சமாளித்த தெம்பில்தான் சென்னை பிட்ச்சில் சென்னையின் ஸ்பின் பௌலர்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு சேப்பாக்கம் வந்திருக்கின்றனர்.

விராட் கோலி

'விராட் கோலி உட்பட எங்களின் பேட்டிங் யூனிட்டின் அத்தனை பேரும் ஸ்பின்னை நன்றாக ஆடிக் கூடியவர்கள்தான்.'என விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் அந்த அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக். அவர் இன்னொரு விஷயத்தையும் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார். அதாவது, 'கோலி இப்போது கூட கூடுதலாக ஒரு ஷாட்டில் ஒர்க் செய்து வருகிறார்.' என்றார். அந்த ஷாட் என்னவாக இருக்கும்? சேப்பாக்கத்தில் கோலி அந்த ஷாட்டை ஆடுவாரா என்றும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

தினேஷ் கார்த்திக் தங்கள் அணியின் வீரர்கள் மீது நம்பிக்கை தெரிவித்தாலும், ரெக்கார்டுகளின் படி ரஜத் பட்டிதர் மட்டும்தான் ஸ்பின்னர்களுக்கு எதிராக வலுவாக இருக்கிறார். அவர் மட்டும்தான் ஸ்பின்னர்களுக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். கோலி கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தாலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 120 தான். இந்தப் போட்டியில் மட்டுமில்லை.

தினேஷ் கார்த்திக்

சமீப சில சீசன்களாக எடுத்துக் கொண்டாலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டைத்தான் வைத்திருப்பார். மற்ற பேட்டர்களும் கன்ஸிஸ்டண்ட்டாக ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்களா என்பது சந்தேகம். அதுவும் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்சில் அஷ்வின், ஜடேஜா, நூர் அஹமத் போன்ற வலுவான ஸ்பின் கூட்டணிக்கு எதிராக. இவர்கள் மூவரும் முழுமையாக 12 ஓவர்களை வீசினால் அதை பெங்களூரு பேட்டர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

சென்னை - மிடில் ஆர்டர் சிக்கல்

சென்னை அணியிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கி வருகிறார். அவரால் நம்பர் 3 யிலும் ஆட முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எங்கே இறங்கும் போது அவரின் முழுமையான திறன் வெளிப்படுகிறதென ஒன்று இருக்கிறதல்லவா. அப்படி பார்த்தால் ருத்துராஜ் ஓப்பனிங்கில் தான் இறங்க வேண்டும். ஏனெனில், டூப்ளெஸ்சிஸூடனும் கான்வேயுடனும் அவர் ஓப்பனிங் இறங்கி கலக்கிய சீசன்களில்தான் சென்னை சாம்பியன் ஆகியிருக்கிறது.

ருத்துராஜ் கெய்க்வாட்

அதனால் ருத்துராஜ் ஓப்பனிங் இறங்குவதுதான் சென்னை அணிக்கு பலம். மேலும், ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கினால் பவர்ப்ளேக்குள் இறங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு வேளை பவர்ப்ளே முடிந்த பிறகு அவர் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது அவருடைய ஆட்டத்துக்கு செட் ஆகாது. அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதுபோக ராகுல் திரிபாதிக்கு ஓப்பனிங்தான் இறங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவரால் நம்பர் 3,4 என எங்கேயும் இறங்கி அதிரடியாக ஆட முடியும். ஆக, இந்த விஷயத்தில் ருத்துராஜ் சீக்கிரமே நல்ல முடிவாக எடுக்க வேண்டும். அதேமாதிரி, மிடில் ஆர்டரிலும் சென்னை அணி சிவம் துபேவை அதிகமாக நம்பியிருக்கிறது. அதற்கு ஒரு தீர்வு வேண்டும். ஒன்று சிவம் துபே எல்லா போட்டிகளிலும் சீராக ஆட வேண்டும் அல்லது தீபக் ஹூடா கிடைத்த வாய்ப்பை உணர்ந்து ஆட வேண்டும்.

CSK vs RCB

பௌலிங்கில் பதிரனா இல்லை என்பது பிரச்சனைதான். அவர் இல்லை என்பதை உணர வைக்காத வகையில் கலீல் அஹமதுவும் நேதன் எல்லீஸூம் பௌலிங் செய்ய வேண்டும். மொத்தத்தில் இது ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

உங்களின் கணிப்புப்படி எந்த அணி வெல்லும் என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.