அமெரிக்காவில் பல்கலையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றது மற்றும் சமூக வலைதளத்தில் வெளியான தேச விரோத பதிவுகளுக்கு 'லைக்' போட்ட காரணங்களுக்காக, அந்நாட்டில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 33 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அதில் 11 லட்சம் பேர் இந்தியர்கள். இவர்களுக்கு எப்1 விசா வழங்கப்படுகிறது.இந்நிலையில், சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹமாசுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி பங்கேற்ற நிலையில்,அவரே தாமாக முன்வந்து வெளியேறினார். அத்துடன், மற்றொருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், தாமாக முன்வந்து உடனடியாக வெளியேறும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் அவர்கள் மீது, பல்கலையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தேச விரோத பதிவுகளுக்கு லைக் போட்டதும் காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் வந்த மாணவர்களில் சில இந்திய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.