சீனாவில் சிறுபான்மையினத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை வாடகைக்கு தாயாக பயன்படுத்தி இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த மார்ச் 24ஆம் தேதி ஆட்கடத்தல் எதிர்ப்பு ஆர்வலர் ஷாங்குவான் ஜங்கி சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லியான்ஷான் தன்னாட்சி மாகாணத்தை சேர்ந்த 17 வயது சிறுமி குவாங்சோவில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் வாடகை தாயாக பயன்படுத்தப்பட்டு, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தை ஜியாங்கி மாகாணத்தை சேர்ந்த 50 வயது முதியவர் என்பது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் ஆவணங்களை பகிர்ந்துள்ளார்.
இதற்காக அந்த முதியவர் குவாங்சோ மருத்துவ நிறுவனத்திற்கு ரூபாய் 1 கோடி வரை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளம் பெண்ணிற்கு திருமணமாகாததால் அந்தப் பெண்ணின் வீட்டுப்பதிவு ஆதாரங்களில் அந்தப் பெண்ணின் கணவராக தன்னை காட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியானதால் பொதுமக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிறுமிகளை வாடகை தாயாக பயன்படுத்துவது குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் சட்டவிரோதமானது என பலரும் அந்த மருத்துவ நிறுவனங்களின் மீது வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.