கோடை காலம் தொடங்கியாச்சு ... வெளியில் காலை எடுத்து வைத்தாலே வெயில் கொளுத்துகிறது. பெரும்பாலான வீடுகளில் ஏசிகள் ஆப் செய்யப்படுவதே இல்லை... இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறே தூங்குகின்றனர். இதனால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். அதனால் மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகளை காணலாம்.
ஏசியை எப்போதும் 24க்கு கீழ் வைக்காதீர்கள். 16 அல்லது 18 டிகிரியில் வைத்திருந்தால் கரண்ட் பில் எகிறி விடும். பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் என்கின்றனர் எலக்ட்ரீசியன்கள்.
சம்மருக்கு முந்தைய குளிர் காலத்தில் நீங்கள் ஏசியை உபயோகிக்காமல் விட்டுவிட்டு, பிறகு சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், அதனாலும் மின்சார பில் எகிறும். நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி இருப்பதால் மறக்காமல் முழுசர்வீஸ் செய்ய வேண்டியது கட்டாயம்.
ஏசியை ஆன் செய்யும் முன் அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடி விடவேண்டும். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. இல்லையெனில் உங்கள் ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருபப்தால் மின் கட்டணமும் அதிகமாகும்.
இப்போதெல்லாம் பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்கலாம்.
நீங்கள் AC-யுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது, அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் AC காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்கலாம். இவைகளை கடைப்பிடித்தாலே கரண்ட் பில் பாதியாக குறையும்.