தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கும் நோக்கில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2024 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்த புதிய நடைமுறைகள், யு.பி.ஐ. சேவைகளை வழங்கும் அனைத்து வங்கிகள், மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் சேவை வழங்குநர்களால் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். நீண்ட காலமாக செயலிழந்து கிடக்கும் மொபைல் எண்களுக்கு இணைக்கப்பட்ட யு.பி.ஐ. முகவரிகள் தானாகவே செயலிழக்க செய்யப்படும்.
அதன்பிறகு பயனர்களின் மொபைல் எண்கள் நீண்ட நாட்கள் செயலிழந்ததாக வங்கிகள் கருதும் பட்சத்தில், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ. முகவரி தானாகவே முடக்கப்படும். இதைத் தவிர்க்க, பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வங்கிகள் மற்றும் யு.பி.ஐ. சேவை வழங்குநர்கள், பயனர்களின் மொபைல் எண் பதிவுகளை வாரந்தோறும் புதுப்பிக்க வேண்டும். தற்போதைய தொலைத்தொடர்பு துறை நடைமுறையின்படி, 90 நாட்கள் செயலற்ற மொபைல் எண்கள் புதிய பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதனையடுத்து பயனரின் வங்கி உறுதிப்படுத்திய மொபைல் எண் தான், அவரின் யு.பி.ஐ. முகவரியாக இருக்க வேண்டும். யு.பி.ஐ. முகவரிகள் நீக்கப்படுவதற்கு முன், பயனர்களிடம் வெளிப்படையான ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த செயல்பாடு தானாக இயங்காது என்பதால், பயனர்களே கைமுறையாக தேர்வு செய்ய வேண்டியிருக்கும். NPCI மூலம் உறுதிப்படுத்தும் நடைமுறைகள் தாமதமாகும் பட்சத்தில், யு.பி.ஐ. செயலிகள் தற்காலிகமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கலாம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனவும் NPCI அறிவுறுத்தியுள்ளது.