குட் நியூஸ்..! வீட்டுக் கடன்களுக்கு 4% வட்டி மானியம்! இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்?
Newstm Tamil April 01, 2025 02:48 PM

மத்திய அரசு அனைவரும் வீடு கட்டுவதை எளிதாக்கும் வகையில் சூப்பரான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டத்தின் கீழ், அரசாங்கம் மக்களின் வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியத்தை அளிக்கிறது. இந்த திட்டத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வோம்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ மானியம் வழங்கும் விதமாக 25 ஜூன் 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்ட இலவச வீடு திட்டமே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் (Pradhan Mantri Awas Yojana Scheme). இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோரின் கனவு நனைவாகி உள்ளது.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் வகைகள்
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தில் வாழும் மக்களுக்காக தனித்தனியாக இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தோடு கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக ஏப்ரல் 01, 2016 அன்று பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் (Pradhan Mantri Awas Yojana Gramin, PMAY - G) திட்டமும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக ஜூன் 25, 2015 அன்று பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா அர்பன் (Pradhan Mantri Awas Yojana Urban, PMAY -U ) திட்டமும் தொடங்கப்பட்டது.

PMAY - U திட்டம் முடிவடைந்த நிலையில் PMAY - U 2.0 வட்டி மானியத் திட்டத்தை பிரதமர் நரரேந்திர மோடி 17 செப்டம்பர் 2024 இல் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் வழிக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு வீடு கட்டவோ அல்லது வாங்கவோ மானியத் தொகை வழங்கப்படுகிறது. அதாவது, தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ. 1.80 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு வட்டி வசூலிக்கப்படும்.


கிராமப் பகுதிகளில் இருக்கும் வீட்டு வசதி பற்றாக்குறையை போக்குவதும், நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக்களுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதே பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நோக்கமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல், குறைந்த வருமானம் கொண்ட வகுப்பினர் (Low Income Group - LIG), பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (Economically Weaker Sections - EWS), மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வகுப்பினர் (Middle Income Group - MIG) ஆகியோருக்கு தனியார் துறையுடன் இணைந்து மலிவு விலையில் வீடுகளை வழங்குவதே நோக்கமாக கொண்டுள்ளது.


PMAY கிராமன் (PMAY - G) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் 25 சதுர மீட்டர் அல்லது 269 சதுர அடிகளில் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அதில் 1 ஹால், சமையலறை, படுக்கை அறை, கழிப்பறை ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதற்காக மத்திய அரசு வழங்கும் மொத்த மானியம் ரூ. 2.75 லட்சம் ஆகும். அதுவே நகர்ப்புறமாக இருந்தால் PMAY அர்பன் (PMAY - U) திட்டத்தின் கீழ் ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லமல், 300 - 500 சதுர அடிகள் வரை வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.

மேலும், வீடு கட்டுவதற்கு 4 தவணைகளாக தொகை வழங்கப்படும். அதாவது, வீட்டின் அஸ்திவாரம் அமைத்த உடன் முதல் தவணை தொகை வழங்கப்படும். சன்னல் மட்டம் வரை பணிகள் முடிந்து இருந்தால் 2வது தவணை தொகை வழங்கப்படும். 3வது தவணை தொகையானது கூரை மட்டம் வரை கட்டுமான பணிகள் முடிந்ததும் வழங்கப்படும். இறுதியாக வீட்டின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றவுடன் 4வது தவணைத் தொகை வழங்கப்படும்.

ஆகவே கட்டுமான பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுவிடும். வீடு கட்டுமான பணியின் போது வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக 4 கட்டங்களாக 320 கிலோ இரும்பு கம்பிகளும் 104 சிமெண்ட் மூட்டைகளும் வழங்கப்படும். இந்த பொருட்களுக்கு உண்டான தொகையை மொத்த தொகையில் இருந்து கழித்துவிட்டு தான் மீதித்தொகையை பேங்க் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்வார்கள்.

மோடி வீடு திட்டத்திற்கான தகுதி வரம்புகள் என்னென்ன?


மோடி வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்றால், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதேபோல், PMAY திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டு அல்லது பிபிஎல் பட்டியலில் இருக்க வேண்டும். கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டியது அவசியம்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை (EWS) சேர்ந்த பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்டவர்களின் (LIG) ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். அதுவே, நடுத்தர வருமானம் கொண்டவர்களின் (MIG) ஆண்டு வருமானம் ரூ.6 முதல் ரூ.18 லட்சம் வரை இருக்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சமூக ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட, பட்டியல் சாதி, பழங்குடியின வகுப்பு மற்றும் சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்களாகவும், பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்கவும் வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்பம்.

இதுவரை வீடே இல்லாத குடும்பம். இரண்டு அறைகள், கச்சா கூரை, கச்சா சுவர்கள் கொண்ட வீடுகளில் வசிக்கும் குடும்பம். குடும்பத்தில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். 16 முதல் 59 வயது உடைய ஆண் நபர் இல்லாத குடும்பம். நிலமற்ற குடும்பங்கள். சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் நிபந்தனைகள்


கடந்த 20 ஆண்டுகளில் கிராமப்புற மற்றும் நகரப்புற அரசாங்க வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பலன்களை பெற்று இருக்கக் கூடாது. 3 அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்து இருப்போர், வேளாண் கருவிகள் வைத்து இருப்போர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கடன் பெற தகுதியுடைய கிசான் அட்டை வைத்தருந்தாலோ, குடும்பத்தில் யாராவது ஒருவர் அரசு பணியில் இருந்தாலோ இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

அதேபோல், தொழில் வரி, வருமான வரி செலுத்துபவர்களும் பயன்பெற தகுதியில்லை. குடும்ப உறுப்பினருள் யாராவது மாதந்தோறும் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் பணியில் உள்ளவர்களும், வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. பாசன வசதி உள்ள 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ, பாசன வசதி இல்லாத 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

பிரதமரின் இலவச வீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்


பிரதமரின் இலவச வீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு

  • ரேஷன் கார்டு
  • வருமானச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண் (SBM எண்)
  • தொலைபேசி எண்
  • ஜாதி சான்றிதழ்
  • வீட்டுமனை பத்திர நகல்
  • பட்டா சிட்டா
  • மின் கட்டண ரசீது
  • வீட்டு வரி ரசீது
  • வங்கி கணக்குப் புத்தக நகல்

மோடி இலவச வீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஊராட்சி மன்ற தலைவர் அல்லது ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரிடமும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா அர்பன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், நகர மன்ற தலைவரிடமும் இந்த திட்டத்தை பற்றி விசாரிக்க வேண்டும்.

பிறகு, இந்த திட்டத்துக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தியும் செய்யும்பட்சத்தில், திட்டத்தின் கீழ் வீடு வேண்டும் என்று அவர்களிடம் தெரிவிக்கலாம். அதன்பிறகு, அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு நேரில் சென்று திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும். பிறகு, அந்த விண்ணப்பத்துடன், தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து ஊராட்சி மன்ற அலுவலர் அல்லது நகர மன்ற அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்த்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கோ அல்லது மாவட்ட அலுவலகத்திற்கோ அனுப்பி வைப்பார்கள். அங்குள்ள அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பிறகு, உங்களை பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளியாக இணைத்துக் கொள்வார்கள்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


PMAY U திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க: பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா அர்பன் திட்டத்திற்கு (PMAY - U)விண்ணப்பிக்க முதலில் https://pmay-urban.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply for PMAY - U 2.0 என்பதை கிளிக் செய்யவும். பின்னர், தகுதியை சரிபார்க்க ஆண்டு வருமானம் மற்றும் இதர விவரங்களை உள்ளிடவும்.

ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும். இப்போது, விண்ணப்ப படிவத்தில் முகவரி, வருமானம் மற்றும் தேவையான அனைத்து தகவல்களையும் பிழையில்லாமல் பூர்த்தி செய்து Submit என்ற பொத்தானை கிளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

PMAY G திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க: பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்திற்கு (PMAY - G)விண்ணப்பிக்க முதலில் https://pmayg.nic.in/netiayHome/home.aspx என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் இருக்கும் Awaassoft என்பதை கிளிக் செய்தவுடன், மற்றொரு பட்டியல் திறக்கும். அதில் Data Entry என்பதை கிளிக் செய்யவும். இப்போது மற்றொரு பக்கத்தில் Data Entry for Awaas என்பதை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய மாநிலம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து Continue என்ற பொத்தானை கிளிக் செய்யவும். அடுத்து, பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு Login பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் திறக்கும், அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களையும் பிழையில்லாம் பூர்த்தி செய்யவும்.

2வது பிரிவில் வங்கி கணக்கு தகவல்களை நிரப்பி, 3வது பிரிவில் ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண் போன்றவற்றை உள்ளீடு செய்யவும். கடைசியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் நிரப்பப்பட்ட தகவல்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் rhreporting.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம்.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்துக்கு வங்கி மூலம் விண்ணப்பிப்பது எப்படி?


பிரதம மந்திரி அவாஸ் யோஜனா அர்பம் 2.0 (PMAY - U 2.0) திட்டத்தின் வீட்டுக் கடன் மானியத்தொகையை வங்கி மூலமும் விண்ணப்பித்து பெறலாம். அதற்கு, பின்வரும் வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கிக்கு நேரில் செல்லவும். பின்னர், அங்கு வழங்கப்படும் PMAY விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
PMAY வீட்டுக் கடன் மானியத்தொகை வழங்கும் வங்கிகள்:

  • பேங்க் ஆஃப் பரோடா
  • இந்தியன் பேங்க்
  • கனரா பேங்க்
  • கார்ப்பிரேஷன் பேங்க்
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
  • ஐடிபிஐ பேங்க்
  • இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
  • ஆக்சிஸ் பேங்க்
  • சிட்டி யூனியன் பேங்க்
  • ஐசிஐசியை பேங்க்
  • கரூர் வைசியா பேங்க்
  • கோட்டக் மஹேந்திரா பேங்க்
  • எஸ் பேங்க்
  • ஃபெடரல் பேங்க்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.