மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ் என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் குழாயில் இன்று ஏப்ரல் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வெடிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நூறு அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இது குறித்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு நிகழ்ந்த இடம் ஒரு குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ளதால், அருகிலுள்ள கம்புங் கோலா சுங்கை பாரு கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்கு தீ பரவியது. இதனால், சில மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்கவும், சிக்கியவர்களை மீட்கவும் மலேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பெட்ரோனாஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட குழாயின் வால்வை மூடியதாகவும், தகவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களை செலங்கோர் பேரிடர் மேலாண்மை குழு, புத்ரா ஹைட்ஸ் மசூதியின் பல்நோக்கு மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.