தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 72 மணிநேரம் தடுத்து வைக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பிள்ளையான், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (ஏப்ரல் 9) அதிகாலை அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர்.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர்.
சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை,
இந்த நிலையில், காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்து வந்தன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல் போயிருந்தார்.
கொழும்பில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பேராசிரியர், திடீரென காணாமல் போயிருந்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அவர் கடமையாற்றியுள்ளார்.
இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 2006ஆம் ஆண்டு முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய போலீஸார், 19 வருடங்களின் பின்னர் பிள்ளையானை கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில் பிள்ளையான் செயற்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
பிள்ளையான் மீதான குற்றச்சாட்டுகள்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னரான காலத்தில் பிள்ளையான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயத்தில் 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை சம்பவத்திற்கும், பிள்ளையானுக்கும் இடையில் நேரடித் தொடர்பு காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணைகளில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜப்கஸவின் ஆட்சிக் காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் செயற்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிள்ளையான், பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில் நிராகரித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16வது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்து அதனை இன்று வரை செயற்படுத்தி வருகின்றார்.
வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்திற்காக நடத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தலில் முதலாவது கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு