உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது போலவே, மேலும் 3 பெண்களும் தனித் தனியாக 17 முதல் 18 பிரசவங்களும், பல கருத்தடை செய்ததாக பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அதில் நக்லா கடம் கிராமத்தை சேர்ந்த சுனிதா மற்றும் மச்ச்லா தேவி ஆகியோர், 2021–2023 இடையே 18 முறை பிரசவித்ததாகவும், 3 முறை கருத்தடை செய்ததாகவும் மருத்துவ பதிவுகள் காட்டுகின்றன. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில், சுனிதாவுக்கு 55 வயது ஆகிறது எனவும் கடந்த 36 வருடங்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் 3 குழந்தைகளை வளர்த்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இது போன்று மச்ச்லா தேவிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக கருத்தடை நடந்துவிட்டது.
இது போன்ற போலி பதிவுகளின் மூலம் சுனிதாவுக்கு ரூ.31,000, மச்ச்லா தேவிக்கும் ரூ.31,000, ராஜ்குமாரி எனும் மற்றொரு பெண்ணுக்கு ரூ.29,800 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் அசோக் எனும் ஆண் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஒரு ‘சுய உதவி குழு’(Self Help Group) நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் பெண்களின் பெயரில் கணக்குகள் திறந்து NHM திட்டத்தில் வரும் பணத்தை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு வெறும் ₹300–₹400 மட்டும் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இந்த மோசடி தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.