திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் நேற்று காலை சுபமுகூர்த்த தினத்தையொட்டி வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்துக் கொண்டிருந்த போது அந்த பகுதிக்கு மாலையும் கழுத்துமாக மண கோலத்தில் வந்த இளம் ஜோடி, திடீரென மாலையை மாற்றிக் கொண்டு திருமணத்திற்கு தயாரானார்கள். அப்போது இளைஞர், காதலியின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போது திடீரென திரைப்பட பாணியில், அங்கு அலறியடித்தப்படி வந்து சேர்ந்த பெண் வீட்டாரும், இளைஞரின் குடும்பத்தினரும் திருமணத்தை நிறுத்தி களேபரத்தில் ஈடுபட்டனர்.
மண கோலத்தில் இருந்த பெண்ணைப் பார்த்த அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறியபடி தங்களது மகளைக் கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்யப் பார்ப்பதாக கூச்சலிட்டனர். மணக் கோலத்தில் இருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்ற போது, காதலனின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஒருபுறம் இரு வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இளம் பெண்ணின் கழுத்தில் வாலிபர் தாலி கட்டியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதியின்றி கோயில் சன்னதியில் திருமணம் தொடர்பாக செய்துக் கொண்டது தொடர்பாக கோயில் அலுவலர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பொதட்டூட்பேட்டை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி(21), பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா(19) இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் மணமக்களை அனுப்பி வைத்தனர்.