உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கைப் பெயிண்டைப் பூச வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் மதிப்பாய்வுக் கூட்டம், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெறச் செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசுக் கட்டடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை பெயிண்டைப் பயன்படுத்த வேண்டும், அதோடு அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.
பசு பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பாளர்களை பணியமர்த்தி சரியான நேரத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குதல், பசுத் தீவனம், தேவையான அளவு தண்ணீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கால்நடைகள் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் ஆதரவற்ற பசு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பசுக்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.