RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை
Vikatan June 07, 2025 08:48 AM

'விஜய் மல்லையா பேட்டி...'

பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். நிறைய விஷயங்கள் குறித்து விரிவாக பேசியிருக்கும் விஜய் மல்லையா, பெங்களூரு அணியை அவர் எப்படி வாங்கினார் என்பது பற்றியும் சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.

விஜய் மல்லையா

'விஸ்கி விளம்பரத்துக்குதான் ஆர்சிபி!'

விஜய் மல்லையா கூறியிருப்பதாவது, ''ராயல் சேலஞ்ச் விஸ்கி நிறுவனத்தை பெரிய முதலீடு செய்து வாங்கியிருந்தேன். விளையாட்டுப் போட்டிகளின் வழியாகவும் இசைக் கச்சேரிகளின் வழியாகவும் இளைஞர்களிடம் நம்முடைய ப்ராண்டை கொண்டு சேர்க்க முடியும் என எனக்கு தெரியும். நான் ராயல் சேலஞ்சை வாங்கியிருந்த சமயத்தில்தான் பிசிசிஐ இல் ஐ.பி.எல் என்கிற ஒரு தொடரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதுசம்பந்தமாக பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கலந்துகொண்டேன். லலித் மோடி முன்வைத்த செயல்திட்டம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நீங்கள் ஏதேனும் அணியை வாங்க ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா? என லலித் மோடி கேட்டார். 'கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் ஒரு நாட்டில் நம்முடைய ப்ராண்டை விளம்பரம் செய்ய இதை விட நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்குமா?' என எனக்குத் தோன்றியது.

Vijay Mallya | Lalith Modi

ராயல் சேலஞ்ச் மற்றும் கிங்பிஷ்சர் இரண்டு நிறுவனங்களுக்காகவும் இரண்டு அணிகள் வேண்டும் என்றேன். 'அதெல்லாம் முடியாது. ஒரு நபர் ஒரு அணியை மட்டும்தான் வாங்க முடியும்.' எனக் கூறிவிட்டார். அப்படியிருந்தாலும் நான் மூன்று நகரங்களை சேர்ந்த அணிகளுக்காக ஏலம் கோரியிருந்தேன். மும்பைக்கும் ஏலம் கேட்டிருந்தேன். ஆனால், அம்பானி குழுமத்தினர் அதை வென்றுவிட்டார்கள்.

மூன்று அணிகளுக்கும் சேர்த்து அதிக தொகையை நான் தான் கோரியிருந்தேன். அதனால் என்னை ஒரு அணியை தேர்ந்தெடுக்க சொன்னார்கள். நான் பெங்களூருவை தேர்ந்தெடுத்துவிட்டேன். அப்படித்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உருவானது. 'விஜய் மல்லையாவுக்கு கிரிக்கெட் பிடிக்கும். அதனால் அவருக்கென ஒரு அணியை வாங்குகிறார்.' என ஊடகத்தினர் பேசினார்கள்.

RCB

ஆனால், ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் பத்தே ஆண்டுகளில் லாபத்தை எடுத்துவிட்டனர். நான் பெங்களூரு அணியை 112 மில்லியன் டாலருக்கு வாங்கினேன். இப்போது ஒவ்வொரு அணியின் மதிப்பும் பில்லியன் டாலர்களை கடந்துவிட்டது.' என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.