ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (GMC) மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர் ஒருவர் உதைப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ஜூனியர் மருத்தவர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இதனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட 60 வயதான ராஜீந்தர் குமார் என்ற நோயாளி, சண்டிகர் PGI மருத்துவமனையிலிருந்து ஜம்மு GMC-க்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டும், அவர் மூச்சுத்திணறல் காரணமாக ஜூலை 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியே காரணம் எனக் கூறிய உறவினர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு பெண் மருத்துவரை உடல் ரீதியாக தாக்கினர்.
சம்பவத்துக்குப் பின்னர் GMC டீன் டாக்டர் அசுதோஷ் குப்தா, “மருத்துவர்கள் மீது வன்முறை ஏற்படும் நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. இத்தகைய தாக்குதல்களுக்குத் துணிந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கூறினார். போலீசார் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மருத்துவர்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க, மருத்துவமனையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.