உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபாத் கோட்வாலி பகுதியில் பரிதாபமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நான்கு குழந்தைகளின் தந்தையான சர்வேஷ் என்ற நபர், தனது மனைவியின் துரோக உறவால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த அவர், பக்கத்து வீட்டுக்காரருடன் தனது மனைவி தொடர்பில் இருப்பதைக் கண்டதும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். பின்னர், அந்த நபருடன் மனைவி ஓடிப்போனதும் சர்வேஷ் அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்தார்.
மனைவியின் நடத்தை மாறாமல் தொடர்ந்ததாலே தொடர்ந்து குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட்டன. ஒருநாள் கடுமையான வாக்குவாதத்தின் போது, மனைவி “நீ விஷம் குடிச்சு சாகணும்” என்று கூறியுள்ளார். அவளது வார்த்தைகள் காரணமாக மன வேதனையில் மூழ்கிய சர்வேஷ், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நிலைமை மோசமானதால் ஹர்தோய் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் சர்வேஷின் மகள் மனு அளித்தார். அதில், தந்தையின் மரணத்திற்கு தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான ஹக்கீம் என்பவரின் துரோக உறவுதான் காரணம் எனக் கூறப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், ஹர்தோய் போலீசார் மனைவிக்கும், அவரது காதலனுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். தற்போது இரண்டு பேரும் போலீசின் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த சம்பவம் முழு குடும்பத்தையும் சிதறடித்துள்ளது. நான்கு குழந்தைகள் தந்தையை இழந்து தவிக்கின்றனர். தாயின் செயல் மற்றும் தந்தையின் தற்கொலை ஆகியவற்றால் அவர்களது வாழ்கை கேள்விக்குறியாகியுள்ளது. துரோகமான காதல் ஒரு குடும்பத்தை அழித்து விட்டதென, அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.