பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று தமிழகம் வந்தடைந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல்வரின் காலை உணவுத் திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் அவர்களால் மதுரையில் தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நாளை (26-ஆம்) தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அழைப்பின் பேரில் பகவந்த் மான் இன்று சென்னை வந்துள்ளார். அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று வரவேற்றார்.
அந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சென்னையில், செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: தமிழகத்திற்கும், பஞ்சாப்பிற்கும் இடையே நீண்டகால நல்லுறவு இருக்கிறது என்றும், கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது என்று பேசியுள்ளார்.
அத்துடன், தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று இங்கு வந்ததும், காலை உணவுத் திட்டம் விரிவாக்க விழாவில் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.