தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. கொலை, கொள்ளை சம்பவங்கள் மட்டுமின்றி, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் வெளியிட்ட பதிவில்,“தேனி அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமானது. சட்டவிரோதச் செயல்களை எதிர்த்து புகார் அளிப்பவர்களுக்கு திமுக அரசு தரும் சன்மானம் மரணம்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன் தனது பதிவில் மேலும்,சசிக்குமார் பலமுறை ஆதாரங்களுடன் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை.அந்த அலட்சியமே இந்தக் கொலைக்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மணல் கடத்தல், கனிமவளக் கொள்ளை குறித்த புகார்களை விசாரிக்க வேண்டிய காவல்துறையே திமுக அரசின் “ஏவல்துறையாக” செயல்படுகிறது.இதனால், சமூக ஆர்வலர்கள் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது.எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் தனது பதிவை முடித்துகொள்வதில்,“இயற்கை ஆர்வலர் சசிக்குமார் படுகொலைக்கு தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையாகச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இனிமேனும் மணல் கடத்தல் மற்றும் கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்”என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.