சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும்வகையில், ‘ஜென் சி’ என்ற குழுவை தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மந்திரிகள் மற்றும் அதிகாரம் மிக்கவர்களின் வாரிசுகள் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர் என்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் எப்படி வந்தது? ஊழல் மூலம் வந்ததா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதனால், நேபாள அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. நேபாளத்தில் இயங்கி வரும் சமூக வலைத்தளங்கள் தங்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கெடு’ விதித்தது. அந்த கெடுவுக்குள் பதிவு செய்யாத பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்பட 26 சமூக வலைத்தளங்கள் மீது நேபாள அரசு தடை விதித்தது.
இதனால், நேபாள மாணவர்களும், இளைஞர்களும் ஆத்திரம் அடைந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் தலைநகர் காட்மாண்டுவில் ‘ஜென் சி’ அமைப்பின்கீழ் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அதில், 19 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் 12 வயது மாணவர் ஆவார். மோதல் மற்றும் கல்வீச்சில், போலீசார், போராட்டக்காரர்கள் உள்பட 300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புப்படையினர் தடுக்க முற்பட்டதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் நாடு முழுவதும் பரவியது. நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
அரசுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்த நிலையில் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், நேபாள இளைஞர் போராட்டக்காரர்கள், முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிகா கார்க்கியை, நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முன்மொழிந்துள்ளனர்.புதன்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட ஒரு மெய்நிகர் கூட்டத்தில் நாட்டின் இடைக்காலத் தலைவராக கார்க்கி முன்மொழியப்பட்டார்.
இருப்பினும், பங்கேற்பாளர்கள் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை, மேலும் அந்தப் பெயர் நேபாள இராணுவத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று நேபாள செய்தித்தாள் நாக்ரிக் தெரிவித்துள்ளது.