குஜராத்தில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் சக்கரம் இல்லாமல் தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தின் கண்ட்லா நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான கியூ 400 விமானம் மும்பைக்கு இன்று 80 பயணிகளுடன் கிளம்பியது. விமானம் கிளம்பி சென்ற பின், விமானத்தின் மூக்குப்பகுதியில் இருந்த வெளிப்புற சக்கரம் ஒன்று ஓடுபாதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையரகம் மூலம் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
ஆனாலும், விமானம் தொடர்ந்து மும்பைக்கு சென்று தரையிறங்க பட்டுள்ளது. தரையிறங்க 20 நிமிடங்கள் இருந்த நிலையில், சக்கரம் இல்லாதது குறித்து பயணிகளுக்கு விமானி தகவல் தெரிவித்ததால் பயணிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.
உடனடியாக மும்பை விமான நிலையத்தில் அவசரகால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, சக்கரம் இல்லாமலேயே விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்தே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். குறித்த விமானம் அதன் ஆற்றலை பயன்படுத்தி முனையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்படுவது சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.