உத்திரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், ஒரு கணவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரை தாக்கி, தலையை மொட்டை அடித்து, மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இர்ஷாத் என்ற நபர், தனது மனைவி மற்றொரு ஆணுடன் தொலைபேசியில் பேசியதாக சந்தேகித்து அவரை தாக்கினார். பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர்கள் காப்பாற்றியதாகவும், பின்னர் குற்றம்சாட்டப்பட்ட இர்ஷாத் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில், "செப்டம்பர் 10 அன்று, எனது கணவர் இர்ஷாத், நான் வேறு ஒருவருடன் பேசுவதாக சந்தேகித்து, என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். பின்னர், என்னை உதைத்து, குத்தினார். ஒரு ரேசரால் எனது தலையை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்து, என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, கொலை மிரட்டல் விடுத்தார்," என்று தெரிவித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்த உறவினர்களும், குழந்தைகளும் உடனடியாக வந்து அவரை காப்பாற்றினர். இர்ஷாத் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். அடுத்த நாள், காவல்துறையினர் இர்ஷாதை கைது செய்தனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் வந்து, தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து, புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
Edited by Siva