போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 11 பேர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகம் இன்று கூறியுள்ளதாவது;
'இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 68,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் இன்று 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிற்கு அனுப்பியது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நாசர் மருத்துவமனையில் இந்த உடல்களை ஒப்படைத்தது. இஸ்ரேல் திருப்பி அனுப்பிய மொத்த உடல்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.' என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்கையில்,
ஹமாஸ் நேற்று ஒப்படைத்த மற்றொரு பணயக்கைதியின் உடல் எலியாஹு மார்கலித் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது. அத்துடன், பாலஸ்தீனிய போராளிக்குழு காசா பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் உடல்களைத் தேடி வருகிறது என்றும், மேலும், அந்தப் பகுதியில் கூடுதல் உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதாவது, போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.