விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து பரிட்சை எழுத வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கருத்து கூறியுள்ளார்.
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்றம் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக மொத்தமாக 100 நாட்கள் கூட சட்டமன்றம் நடத்தவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சட்டமன்றத்தில் கூடுதல் செலவிமான 3,000 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. இந்திய அளவில் கடன் வாக்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, மூலதன செலவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அதற்கு நிதியமைச்சர் முழுமையாக பதில் அளிக்கவில்லை.
மூலதன செலவிற்காக மின்சார கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்த கூடாது, திமுக ஆட்சி தொடர ஏதாவது ஒரு சாதனையை திமுகவால் கூற முடியுமா? வரி முறைகேட்டில் ஈடுபட்டு தான் திமுகவின் சாதனையாக உள்ளது. வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கைகள் எடுத்தது?, காவல்துறை கவன குறைவால் கரூர் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. கரூர் நிகழ்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டதற்கு முதல்வர் கோபப்படுகிறார். வடகிழக்கு பருவமழைக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், திமுக அரசு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஜனநாயக படுகொலை செய்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சை நேரலை செய்யாமல் திமுக அரசு இருட்டடிப்பு செய்து சில்லறைத்தனமாக நடந்து கொள்கிறது.
இருமல் மருத்து தயாரிப்பு விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை. திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை, தொண்டர் நாடாள முடியுமா என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியே சாட்சி. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டங்களில் புரட்சி ஏற்படுத்தி உள்ளார். முல்லை பெரியாறு விவகாரம் குறித்து முதலமைச்சர் இதுவரை பேசவில்லை. எந்தவொரு பிரச்சினைக்கும் திமுக அரசு தீர்வு காணவில்லை. மக்களின் ஜீவாதர உரிமைகளான முல்லைப் பெரியாறு, காவேரி, கச்சத்தீவிற்கு பாதுகாப்பு இல்லை, மொத்தத்தில் தமிழகத்தில் ஜனநாயகம் செத்து விட்டது. திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது. ஸ்டாலின் பின்னால் எத்தனை சக்திகள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது. திமுக ஆட்சியில் ’ம்’ என்றால் கைது, ’ஏன்’ என்றால் சிறைவாசம், 2026 ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மக்களாட்சி மலர போகிறது, எடப்பாடி பழனிச்சாமி யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முடிவு எடுப்பார்.
கூட்டணி கட்சி, தேசிய கட்சி, தோழமை கட்சி, துணை நின்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அமைச்சர் பதவிகள் குறித்து முடிவெடுப்பார். ஒலிம்பிக்கில் ஓடி தங்கம், வெள்ளி போன்ற பரிசுகள் பெறுவது ஒரு முறை, ஒலிம்பிக்கில் ஓடி பரிசு பெறும் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை திமுக தட்டி பார்க்க நினைக்கிறது. ஒலிம்பிக்கில் வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம். விஜய் பரிச்சை எழுதிய பின்னர் பார்க்கலாம், விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிச்சை எழுத வேண்டும்" என்றார்.