பீஹாரில் வரும் நவம்பர் 06-ஆம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலும், 11-ஆம் தேதி 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: பாஜவை தோற்கடித்து தேசிய ஜனநாயக கூட்டணியை வேரறுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் 4என்றும், நவம்பர் 14-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் அப்போது உண்மை வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பயப்படுகிறோம் என்ற சூழலை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும், நானும், எனது கட்சியினரும் யாருக்கும் பயப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீங்கள் விரும்பும் அளவுக்கு வேட்பாளர்களை வாங்குங்கள், முடிந்தவரை பல வேட்பாளர்களை அச்சுறுத்துங்கள். முடிந்தவரை பல வேட்பாளர்களை அவர்களின் வீடுகளில் சிறையில் அடைத்து துன்புறுத்தினாலும் தேர்தல் நடத்தப்படும் என்றும், அது உங்களை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு பலமாக போராடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் மகா கூட்டணி அல்ல. ஜன் சுராஜ் கட்சியின் சார்பில், பல நல்லவர்கள் களமிறக்கப்பட்டதால் அவர்களுக்கு போராட தைரியம் இல்லை. தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதை மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பீஹார் மாநில பாஜ தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் எங்கள் வேட்பாளர்களில் ஒருவரை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும், உள்துறை அமைச்சர் உங்களை வந்து சந்திக்கச் சொல்லிவிட்டு, பின்னர் அவர்களின் அனைத்துத் தலைவர்களையும் சேர்த்து உங்களைச் சுற்றி வளைத்தால் உங்களுக்கு என்ன வழி இருக்கும்? என்ன நடக்கிறது என்பது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்வோம் என்றும் பேசியுள்ளார்.
அத்துடன், கடந்த சில வருடங்களாக யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது, லாலு யாதவ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசியல் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர மக்களுக்கு விருப்பம் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களில், மூன்று ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், எங்களுக்கு வாக்களியுங்கள், இல்லையெனில் லாலுவின் காட்டு ராஜ்யம் மீண்டும் உருவாகும் என்று மக்களை பயமுறுத்த அவர்கள் மகா கூட்டணியைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.