தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கோரிய வழக்கில், வருகிற டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தவறினால், சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா தாக்கல் செய்த மனுவில், சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், கிராமப்புற ஏழைப் பெண்கள் மாற்று முறைகளைப் பின்பற்றிப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது பெண்களின் உடல்நலத்தைப் பேணுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் உள்ளதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) விண்ணப்பித்தார்.
அதற்கு, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய இரண்டும் அப்படி எந்தத் திட்டமும் அமலில் இல்லை என்று பதிலளித்திருந்தன. எனவே, ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில் இலவசமாக அல்லது மானிய விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்தது. அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், டிசம்பர் 16-க்குள் மனுவுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில், சுகாதாரத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சமூக நலத்துறைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.