தெற்கு கடல் பகுதிகளில் இரட்டை வானிலை மாற்றம்..! 7 மணி வரை 8 மாவட்டங்களில் இடி மின்னல் மழை வாய்ப்பு
Seithipunal Tamil November 21, 2025 12:48 AM

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, கடந்த சில நாட்களாக லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியைச் சூழ்ந்திருந்த காற்றழுத்த தாழ்வு அமைப்பு, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைத்து காணப்படுகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.இதனுடன், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள மேலடுக்கு வளிமண்டல சுழற்சி, வங்கக்கடலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

அதன் தாக்கத்தால், வருகிற 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதன் பின்னரும் தொடர்ச்சியாக வலுவடைந்து தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி பயணிக்கும் சாத்தியம் அதிகம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வானிலைச் சூழ்நிலையின் தாக்கமாக, இன்று தமிழகத்தின் பல இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.மேலும், மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை சிறப்பு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவை:
அரியலூர்
கடலூர்
கன்னியாகுமரி
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர்
திருநெல்வேலி
இந்த மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.