ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமதர்பாலி விமான ஓடுதளத்தில், ஊர்க்காவல் படை பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. 187 காலிப் பணியிடங்களுக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 8,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.
தேர்வு எழுத முறையான மேசைகளோ, இருக்கைகளோ அல்லது பாய்களோ வழங்கப்படாததால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திறந்தவெளி ஓடுதளத்திலேயே அமர்ந்து தேர்வு எழுதினர்.
இந்த வேலைக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என்றாலும், வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பொறியாளர்கள், எம்பிஏ, எம்சிஏ போன்ற உயர் கல்வி பயின்றவர்களும் அதிக அளவில் பங்கேற்றனர். கூட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
3 கூடுதல் எஸ்பிக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முறையான தேர்வு மையங்கள் கூட ஒதுக்காமல், ஓடுதளத்தில் இளைஞர்களை அமர வைத்தது அரசு நிர்வாகத்தின் மீதான கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
Edited by Mahendran