தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.
பாதிரியார் காட்வின்
41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கை காட்டும் தலைவரான விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகிறது. நான் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும்.
பாரம்பரியம் என்பது இன்றோடு, நேற்றோடு முடிவது அல்ல. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார். பாதிரியார் காட்வினின் இந்த பேச்சுக்கு த.வெ.க தொண்டர்கள், சர்ச் பாதிரியார் அலாய்சியஸிடம் புகார் அளித்தனர். ‘சர்ச்சை அரசியல் மேடையாக்க வேண்டாம், பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட வேண்டும்’ என இளைஞர்கள் முறையிட்டனர்.
மேலும், ஒரு வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் போது, மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவது உள்நோக்கத்துடன் செயல்படும் குற்றம் எனவும், பாதிரியார் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தி.மு.க ஏஜெண்டாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.