உத்தரப்பிரதேசத்தில் மூடநம்பிக்கையின் காரணமாக 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த அனூப் குமார் வர்மா என்பவர், தனது மகனின் தொடர் உடல்நலக்குறைவை குணப்படுத்த மாந்திரீகன் ஒருவரை நாடியுள்ளார்.
அப்போது, சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் நோய் குணமாகும் என அந்த மாந்திரீகன் கூறிய ஆலோசனையை ஏற்று, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது உறவினரின் மகனான விவேக் வர்மாவை அனூப் குமார் கடத்திச் சென்று கொடூரமாக நரபலி கொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சுனில் பிரசாத், இச்சம்பவம் சமூகத்தில் நிலவும் கொடிய மூடநம்பிக்கைகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று கூறி, குற்றவாளி அனூப் குமாருக்கு மரண தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
எனினும், இந்த விபரீத செயலுக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கருதப்பட்ட மாந்திரீகன் உள்ளிட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவர்களை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.