உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவன் முகேஷ் ஜாவை போலீஸார் என்கவுண்டர் மூலம் கைது செய்தனர். உயிரிழந்த அனிதா சௌத்ரிக்கும், முகேஷ் ஜாவுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோயிலில் ரகசியத் திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும், கருத்து வேறுபாடு காரணமாகச் சில காலத்திலேயே அனிதா, முகேஷைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அனிதா தன்னை விட்டுச் சென்றதை பெரும் துரோகமாகக் கருதிய முகேஷ், அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.
தங்களது திருமண நாளான ஜனவரி 4-ஆம் தேதியையே அனிதாவைக் கொலை செய்ய முகேஷ் தேர்வு செய்துள்ளார். கடந்த ஜனவரி 4-ஆம் தேதி இரவு அனிதா வழக்கம் போல ஆட்டோ ஓட்டிச் சென்றபோது, அவரை வழிமறித்த முகேஷ் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அனிதாவைச் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
தலைமறைவாக இருந்த முகேஷை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று இரவு ஜான்சி அருகே முகேஷை போலீஸார் சுற்றி வளைத்தபோது, அவர் தப்பியோட முயன்று போலீஸாரை நோக்கிச் சுட்டுள்ளார்.
இதையடுத்து, தற்காப்பிற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான முகேஷ் அளித்த வாக்குமூலத்தில், பிரிந்து சென்ற கோபத்தினால் அனிதாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.