நேரில் ஆஜராகுங்கள்… இல்லையெனில் மனுவை பரிசீலிக்க முடியாது...! - மல்லையாவுக்கு நீதிமன்றம் கடைசி வாய்ப்பு...!
Seithipunal Tamil February 14, 2026 02:48 PM

பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு, மும்பை உயர்நீதிமன்றம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை தொடங்கியவுடன் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி, “இந்தியா திரும்பும் உறுதி இல்லாமல், வெளிநாட்டில் இருந்தபடி சட்ட உதவி கோர முடியாது” என்று தெளிவாக தெரிவித்தது.

முன்னதாகவே, இந்த மனுவை பரிசீலிக்க வேண்டுமெனில் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த டிசம்பரில் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இருப்பினும் அவர் இன்னும் இந்தியா திரும்பாததால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.இதனால் நீதிபதிகள் சந்திரசேகர் மற்றும் கௌதம் அங்கட் அடங்கிய அமர்வு, “இது கடைசி வாய்ப்பு” என எச்சரிக்கை விடுத்து, இந்தியா வருவாரா இல்லையா என்பதை எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு உத்தரவிட்டது.

அந்த பதிலை பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.மேலும், சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள மல்லையா, 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.

அவரை இந்தியாவுக்கு ஒப்படைக்க சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த கடுமையான நிலைப்பாடு வழக்கை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, “திரும்புவாரா மல்லையா?” என்ற கேள்வியை மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தீவிர பரபரப்பு ஏற்படச் செய்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.