'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?' என்னவாகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி?
Vikatan March 03, 2026 04:48 PM

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி நிலவி வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.

திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது.

கூட்டணிக்குள் புகைச்சல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. அதற்கும் முதல்வரும் ப.சிதம்பரமும் ஒன்றாக செல்ல வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம்

இறுதிக்கட்ட பரபரப்பில் உழன்று கொண்டிருக்கிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இதனிடையே, முதல்வரை சிதம்பரம் சந்திக்க இருக்கும் சூழலில், செல்வப்பெருந்தகை சிதம்பரம் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.