தெலுங்குல போயி நடி அங்க உன்னை மதிப்பாங்க.. அங்கே உன் திறமைக்கு மதிப்பு கிடைக்கும்ன்னு வரலட்சுமிக்கு நான் தான் சொன்னேன்.. ராதிகா ஓபன்
Seithipunal Tamil March 03, 2026 04:48 PM

நடிகை வரலட்சுமி சரத்குமார், ‘சரஸ்வதி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் புரோமோஷன் விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், விழாவில் கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் பேசிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

மேடையில் பேசிய ராதிகா, “வரலட்சுமி ஒரு திறமையான நடிகை என்பதை அனைவரும் அறிவார்கள். நான் அவளிடம் ஒரு அறிவுரை கூறினேன். ‘நீ தெலுங்கு சினிமாவில் சென்று நடி. அங்கு உன் திறமைக்கு அதிக மதிப்பு கிடைக்கும். ரசிகர்கள் உன் வெற்றியை கொண்டாடுவார்கள்’ என்று சொன்னேன். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழில் மதிப்பு கிடையாது என்பதல்ல. ஆனால் தெலுங்கில் கிடைக்கும் வரவேற்பு ஒரு நடிகையை வேகமாக வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்லும்,” என்றார்.

தானும் தெலுங்கில் பல படங்களில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ராதிகா, “நானும் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றேன். சில ஆண்டுகள் கழித்து வரலட்சுமி ‘நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து விடலாமா?’ என்று என்னிடம் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இல்லை. நான் கூறியதைப்போலவே அங்கு ரசிகர்கள் அவளை ஊக்குவித்தனர். இயக்குநராகவும் அவள் வெற்றி பெறுவாள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராதிகா இவ்வாறு பேசும் போது, அருகில் இருந்த வரலட்சுமி சிரித்தபடி சம்மதம் தெரிவித்து தலை அசைத்துக் கொண்டிருந்தார். பின்னர் பேசுகையில், “ராதிகா எனது மூன்றாவது பெற்றோர் போன்றவர். கடந்த 25 ஆண்டுகளாக, என் வாழ்க்கையின் பாதி அவருடைய வழிகாட்டுதலில்தான் இருந்தது,” என்று கூறியபோது வரலட்சுமி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

இருவரின் இந்த நெகிழ்ச்சி தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘சரஸ்வதி’ திரைப்படம் வரும் 6-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.