தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு இருக்கும் சொத்து மதிப்பு மற்றும் கடன் குறித்து அதில் தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில், தனது தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற அவர், மனைவி கயல்விழியுடன் வந்து வேட்பு மனுவை அளித்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழியும் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலில் சீமான் தனது சொத்து மதிப்பு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு 5.11 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன் கையில் ரொக்கமாக ரூ. 50 ஆயிரமும், ரூ. 39.81 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், தனது பெயரில் ஹூண்டாய் வெர்னா காரும், 150 கிராம் தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரங்கராஜபுரம் இந்தியன் வங்கியில் ரூ. 9,500, ஆக்ஸிஸ் வங்கி விருகம்பாக்கம் கிளையில் ரூ. 72,000, அண்ணாநகர் எஸ்.பி.ஐ. கிளையில் ரூ.07 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன் பெயரில் அசையா சொத்து ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள சீமான், எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ. 5.11 லட்சம் கடன் இருப்பதாகவும் பிராண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.