உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் கார்பெட் கம்பெனி தொழிலாளி ஒருவரின் நண்பர்களே, அவரது மனைவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பதோஹி பகுதியில் உள்ள கார்பெட் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவர், தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்திலேயே ஹிரா லால் (32) மற்றும் விவேகானந்த் சிங் (35) ஆகிய இருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கணவரின் நண்பர்கள் என்பதால், அவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால், அவர்களின் கண்கள் தனது மனைவியின் மீது தவறாகப் படர்ந்து இருப்பதை அந்த அப்பாவித் தொழிலாளி உணரவில்லை.
சம்பவத்தன்று, கணவர் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில் ஹிரா லால் மற்றும் விவேகானந்த் ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். தெரிந்தவர்கள் என்பதால் அந்தப் பெண் அவர்களை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த காமக் கொடூரர்கள், பெண்ணின் வாயை மூடி மிரட்டி, அவர் மீது அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
மாலை பணி முடிந்து வீடு திரும்பிய கணவரிடம், பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். தனது உயிர் நண்பர்களே இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகத்தைச் செய்ததை அறிந்து அந்த கணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பதோஹி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அபிநவ் தியாகி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் ஹிரா லால் மற்றும் விவேகானந்த் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்யச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்,” என உறுதியளித்தார்.
மேலும் சொந்த வீட்டிலேயே ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.