தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஆதவ், ஆனந்த்
ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலாளரின் பெயரை கூட சரியாக குறிப்பிடத் தெரியாதா என தவெகவை சமூகவலைதளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.
தினமும் யாருக்காவது கடிதமாகவே எழுதிக் கொண்டிருப்பதால் குழம்பி விட்டார்கள் போல!