உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டிய இளைஞரை நடுரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேஷன் ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த அந்த இளைஞன், அப்பெண்ணைப் பார்த்து ஆபாசமாகப் பேசி வம்புக்கு இழுத்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் அந்த இளைஞனைத் துரத்திப் பிடித்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே செருப்பால் சரமாரியாக அடித்தார். இளைஞன் கை கூப்பி மன்னிப்பு கேட்டும் விடாமல், இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டாயா என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்தப் பெண்ணின் தைரியத்தை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, வீடியோவின் அடிப்படையில் அந்த இளைஞனைக் கண்டறியும் பணியில் கோண்டா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
“>
இளைஞன் அடையாளம் காணப்பட்டவுடன் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கும் இந்தப் பெண்ணின் செயலுக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.