DMK Stalin: அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் தவெகவிற்கு செல்ல வேண்டாம் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறராம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையே புரட்டி போட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முளைத்த தவெக ஆளுங்கட்சியாக உருவெடுக்க, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், இந்த தேர்தலால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உருவெடுத்துள்ளது. இதுநாள் வரை திமுக Vs அதிமுக என இருந்த மாநில அரசியல் களம், தற்போது திமுக Vs தவெகவாக மாறியுள்ளது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், தங்களுக்கும் எதிர்காலம் இருக்காது என அதிமுகவினர் பலரும் கூட்டம் கூட்டமாக தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனால் ஒரு கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கர்ஜிக்கப்பட்ட அதிமுக, மெல்ல மெல்ல கரைந்து வருகிறது.
தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதேபோன்று முன்னாள், இந்நாள் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடங்கி கடைமட்ட நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் சாரை சாரையாக ஆளுங்கட்சியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். சி.வி. சண்முகம் தலைமையில் கலகத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவினாலும், அவர்களுக்கு பதவிகள் ஏதும் மீண்டும் வழங்கப்படாததால் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் உள்ளது. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாத எடப்பாடி தனக்கு எதிரானவர்களை தொடர்ந்து நீக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி, அரவணைத்து கொண்டு செல்வதில் எந்த மும்முரமும் தலைமை காட்டாதது தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை பட்டியல் போட்டு கொடுத்தாலும் எடப்பாடி கண்டுகொள்ளாத நிலையில், பிரதான அரசியல் எதிரியான அதிமுக கரைவதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லையாம். தவெக ஆட்சிக்கு வந்ததை விபத்தாகவே கருதும் அறிவாலயம், மீண்டும் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்த அதிமுக நிலைத்து இருக்க வேண்டியது அவசியம் என கருதுகிறதாம். இதற்காக எடப்பாடி உதாசீனப்படுத்திய அதிமுக அதிருப்தி நிர்வாகிகளின் பட்டியலை சேகரித்து ஸ்டாலின் நேரடியாக தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பேசுகையில், “கட்சிக்குள் அதிருப்தி என்பது வரத்தான் செய்யும். காலப்போக்கில் சரியாகிவிடும். அதற்காக திராவிட பாரம்பரியத்தை விட்டு புதியதாக முளைத்த கட்சிக்கு செல்வதா? முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பனையூர் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பத்தை காண்பது வேதனையாக உள்ளது.
கட்சி தலைவரை கூட சந்திக்க முடியாமல் இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைகின்றனர். அவர்களுக்கு அங்கு என்ன மரியாதை கிடைக்கிறது? எனவே அதிமுகவிலேயே தொடர்ந்து இருந்து பணியாற்றுங்கள். விருப்பமில்லையென்றால் திமுகவிற்கு வாருங்கள் உங்களுக்கான உரிய மரியாதை வழங்கப்படும். என்னை நம்புங்கள் தாய்கழகத்தில் உங்களுக்கான முக்கிய பதவிகள் தேடி வரும்” என ஆறுதலுடன் ஸ்டாலின் நம்பிக்கையும் ஊட்டி வருகிறராம். அந்த வகையில் தான் சென்னையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரும் அண்மையில் திமுகவில் ஐக்கியமானாராம். எதிரிக்கட்சியான அதிமுக அழிந்துவிடக்கூடாது என திமுக தலைவர் சிந்திக்கும் அளவிற்கு கூட, எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறை இல்லையே என்பது தற்போது ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படையச் செய்துள்ளதாம்.