தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக- அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக உருவெடுத்து திமுக- அதிமுகவை பின்னுக்கு தள்ளி ஆட்சியை பிடித்துள்ளது தவெக. அந்த வகையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பங்கேற்றனர்.
அடுத்தாக சி.விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட அதிமுக 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவின் இணைந்தனர். எனவே அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், திடீர் திருப்பமாக அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே வருகிற 31 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக முடிவு தொடர்பாக உத்தரவு வெளியாகும் என்ற தகவல் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்திருந்தாலும், கவுன்சிலர்கள் முதல் மேயர் வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவினர் மட்டுமே உள்ளனர். எனவே விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தி தவெக அந்த இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு இறுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 7-வது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை தமிழ்நாடு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம், 7-வது மாநில நிதிக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலவரத்தை ஆய்வு செய்து, மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகள் அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது. இதன் பதவிக்காலம் ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பதவிக்காலத்தை டிசம்பர் 31-ந் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, தள்ளி போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் இல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
அதே நேரம் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் மீதான ஈர்ப்பு காரணமாக மக்கள் வாக்களித்துள்ளனர். அது விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி மன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என திமுகவினர் கூறுகின்றனர். எனவே உள்ளாட்சி மன்ற தேர்தலை தற்போது நடத்தாமல் காலம் தாழ்த்துவது தோல்வி பயம் என விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் தவெகவினரோ தேர்தல் எந்த நேரம் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், முதலமைச்சர் விஜய் மீதான மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் அடி வேரிலிருந்து மாற்றம் வந்தால் மட்டுமே சாத்தியம் எனவே உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து இடங்களையும் தவெக கூட்டணி கைப்பற்றும் என அடித்து கூறுகின்றனர்.