வேலியே பயிரை மேய்ந்த சோகம்! அரசு வேலை ஆசை காட்டி ரூ.10 லட்சம் சுருட்டிய புதுச்சேரி எஸ்.ஐ.!
சிவரஞ்சித் July 27, 2026 12:44 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேலை என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அந்த ஆசையை பயன்படுத்தி ஒரு காவல்துறை அதிகாரியே பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் அரசு பணி என்பது இளைஞர்கள் பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இளைஞர்களின் இந்த வேலைவாய்ப்பு ஆசையையும், தேவையையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வில் தோல்வி... எஸ்.ஐ. அறிமுகம்

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்ஜினீயரிங் (பொறியியல்) பட்டம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு நடத்திய மேல் நிலை எழுத்தர் (UDC) பணியிடங்களுக்கான தேர்வை எழுதி பங்கேற்றார்.

எனினும், கடுமையாக முயற்சித்தும் அந்தத் தேர்வில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது. அரசு வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அந்த இளைஞருக்கு, அவரது நண்பர் ஒருவர் மூலமாக புதுச்சேரி காவல் துறையில் பணிபுரியும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் (SI) அறிமுகம் கிடைத்துள்ளது.

ரூ.10 லட்சம் பேரம்

அந்த சப்-இன்ஸ்பெக்டர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். "தற்போது தேர்வு முடிவுகளில் காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) காலியிடங்கள் உள்ளன. எனக்குத் துறையின் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பும், செல்வாக்கும் உள்ளது. அதனால் உனக்கு நிச்சயம் அந்த அரசு வேலையை வாங்கித் தருகிறேன்" என்று உறுதியளித்துள்ளார்.

அதிகாரியின் வார்த்தையை நம்பிய அந்த இளைஞரிடம் வேலைக்காகப் பணம் பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்படி, கேட்கப்பட்ட ரூ.10 லட்சம் பணத்தை அந்தச் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியுடைய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக இளைஞர் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

2 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் கூறியபடி வேலையை வாங்கித் தரவில்லை. இது குறித்து இளைஞர் சென்று கேட்டபோதெல்லாம், "அரசு அனுமதி விரைவில் கிடைக்கப் போகிறது", "வயது வரம்பு தளர்வு தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறிப் பல்வேறு சாக்குகளைச் சொல்லி காலத்தைக் கடத்தி வந்துள்ளார்.

இவ்வாறாக 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை கிடைக்காததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்த பட்டதாரி இளைஞர், "வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்; நான் கொடுத்த பணத்தையாவது திரும்பக் கொடுத்துவிடுங்கள்" என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார்.

டி.ஜி.பி.யிடம் பரபரப்பு புகார்

ஆரம்பத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்த அதிகாரி, நாளடைவில் அந்த இளைஞரின் தொலைபேசி அழைப்புகளைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், அவரை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை முழுமையாக உணர்ந்த அந்த என்ஜினீயரிங் பட்டதாரி, புதுச்சேரி மாநில காவல் துறை தலைமை இயக்குநரிடம் (D.G.P.) நேரில் சென்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாருடன், சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியின் வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பியதற்கான வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் (Bank Statements) மற்றும் தனது தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket) உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தைப் பறித்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம், புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.