TVK Vijay Local Body Election: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள ஜோதி நிர்மலாசாமி திமுகவிற்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதிமுகவினரே பெரும்பாலான மக்கள் பிரதிநிதி பதவிகளை வகித்துள்ளனர். இதனால் முழு சுதந்திரத்துடன் அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி உள்ளாட்சி அளவிலான பதவிகளை கைப்பற்ற தவெக திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இதனிடையே, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலவரத்தை ஆய்வு செய்து, மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க கடந்த ஆண்டு 7-வது மாநில நிதிக்குழு அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை டிசம்பர் 31ம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், உள்நோக்கத்துடனேயே இந்த தேர்தல் தாமதப்படுத்தப்படுவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, கடந்த திமுக ஆட்சியின் போது அரசின் பல்வேறு அமைப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட சிவ்தாஸ் மீனா, அபய்குமார் சிங், சங்கர் ஜிவால் மற்றும் சுனில் குமார் போன்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதேபோன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியையும் ராஜினாமா செய்யும்படி அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், தனது பதவிக்காலம் 2029ம் ஆண்டு வரையில் இருப்பதால், ராஜினாமா செய்ய முடியாது என விடப்படியாக இருந்து வருகிறாராம். எனவே இவரை அந்த பதவியில் இருந்து நீக்கிய பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளதாம்.
2017ம் ஆண்டு காலத்தில் இருந்தே பத்திரபதிவுத்துறையில் உயர் பொறுப்பில் இருந்த ஜோதி நிர்மலாசாமி, திமுகவிற்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறது. இவர் தலைமை பொறுப்பு வகிக்கும் சூழலில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொண்டால், திமுகவிற்கு சாதகமாக உள்ளடி வேலை பார்க்க வாய்ப்புள்ளது. ஒருவேளை உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்றால் அரசுக்கு பெரிய தலைவலியாக அமையும். எனவே தங்களுக்கு சாதகமான மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க தவெக அரசு சிலரது பெயர்களை பரிசீலனை செய்து வருகிறதாம். அதேநேரம், ஆளுநரால் மட்டுமே தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியும். எனவே, ராஜினாமா செய்ய முடியாது என அடம்பிடிக்கும் ஜோதி நிர்மலா சாமியை பதவியில் இருந்து இறக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசு அடுத்தடுத்து முன்னெடுக்க உள்ளதாம்.
பண செல்வாக்கு மற்றும் சாதி செல்வாக்கு காரணமாகவே மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக திமுக ஆட்சியில் நியமிக்கபட்டதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். ஜோதி நிர்மலாசாமி அரசு அதிகாரியாக இருந்தபோது பல்வேறு ஊழல்கள் மூலமாக பல கோடி ரூபாய் சொத்துகளை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோக PACL எனும் தனியார் நிறுவனம் முறைகேடாக நிலம் பதிவு செய்ததில் இவருக்கும் பங்கு இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை தூசி தட்டி நெருக்கடி கொடுத்து ஜோதி நிர்மலாசாமியை ராஜினாமா செய்ய வைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.