தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக திமுக- அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தது. அந்த வகையில், கடந்த 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஷாக் கொடுத்துள்ளது விஜய், அந்த வகையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் தகைசால் தமிழர் விருதானது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதை இதுவரை சங்கரய்யா, நல்லகண்ணு, குமரி அனந்தன், வீரமணி, காதர் மொய்தீன் உள்ளிட்டவர்களுக்கு அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் வழங்கி கவுரவப்படுத்தினார். அந்த வகையில் தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழும் ரூ. 10,00,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
இந்த நிலையில் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், சுதந்திர தின விழாவில் யாருக்கு தகைசால் தமிழர் விருது வழங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் இந்த விருதானது. தமிழக அரசியலில் மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ம. கிருஷ்ணசாமிக்கு (வயது 86) வழங்கப்பட்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் இந்த விருதை கிருஷ்ணசாமிக்கு வழங்கி கவுரவித்தார்.
காங்கிரஸ் பாரம்பரிய இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையும், பாமக தலைவர் அன்புமணியின் மாமனார் ஆவார், இவரது மகன் விஷ்னு பிரசாத் தற்போது கடலூர் தொகுதி எம்பியாக உள்ளார்.
அந்த வகையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், காங்கிரசையும், பாமகவையும் முதலமைச்சர் விஜய் குஷிப்படுத்தியுள்ளார். அதே நேரம் வரும் நாட்களில் அரசியலில் எந்த வித மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், பாமகவையும் தனக்கு ஆதரவு நிலைப்பாட்டில் வைக்கும் வகையில் சௌமியா அன்புமணியின் தந்தைக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கி பாமகவுடன் தனது நெருக்கத்தை விஜய் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.