சொன்னதை செய்த விஜய்! பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் திடீர் திருப்பம்! புதிய அறிவிப்பு!
கிஷோர் August 24, 2026 12:44 PM

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத்தை தற்போதைய இடத்தில் செயல்படுத்தாமல், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தை தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். புதிய இடங்களை அடையாளம் கண்டு, அவற்றின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் விரிவான ஆய்வு நடத்தப்பட்ட பிறகே இறுதி இடம் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் திட்டம் எப்படி உருவானது?

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு சிக்கல்கள் இருப்பதுடன், எதிர்காலத்தில் சென்னையின் விமானப் போக்குவரத்து தேவையை சமாளிக்க கூடுதல் விமான நிலையம் அவசியம் என்ற நிலை உருவானது. இதையடுத்து சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க நான்கு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 5,320 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்டமிடப்பட்டது. இதில் சுமார் 3,750 ஏக்கர் தனியார் நிலமாக இருந்ததால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறை மேற்கொண்டு வந்தது. திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ செயல்பட்டு வந்தது.

மத்திய அரசின் அனுமதிகளும் அடுத்தகட்ட பணிகளும்

பரந்தூர் விமான நிலையத்திற்கு இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் உள்ளிட்ட முக்கிய அனுமதிகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது. இதனால் அடுத்தகட்டமாக கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் திட்டமிடப்பட்டிருந்தன.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை தற்போதைய முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் பரந்தூர் திட்டம் தொடருமா அல்லது மாற்று இடத்திற்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மாற்று இடங்களை தேடும் தமிழக அரசு

இந்த நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விமான நிலையம் அமைக்கக்கூடிய மாற்று இடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

புதிய இடம் தேர்வு செய்யும்போது விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், விமானப் பாதுகாப்பு, ஓடுபாதை அமைப்பதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆய்வு செய்யப்பட உள்ளன.

மீனம்பாக்கத்தில் புதிய டெர்மினல் 5

இரண்டாவது விமான நிலையத்திற்கான புதிய இடம் தேர்வு செய்யப்படும் நிலையில், தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் திறனையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்காக விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 2 கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில் புதிய டெர்மினல் 5 அமைப்பதற்காக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெர்மினல் 3 உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர், சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 3.3 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறனை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5 கோடி பயணிகளை கையாளும் திறன்

புதிய டெர்மினல் 5 பயன்பாட்டிற்கு வந்த பிறகு, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு சுமார் 5.5 கோடியாக அதிகரிக்கும். இதன் மூலம், உடனடி காலத்தில் சென்னையின் அதிகரித்து வரும் விமானப் பயணிகள் தேவையை சமாளிக்க முடியும் என தமிழக அரசு கருதுகிறது.

ஒருபுறம் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கி அதன் செயல்திறனை மேம்படுத்துவதும், மறுபுறம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான புதிய இடத்தை தேர்வு செய்வதும் அரசின் தற்போதைய திட்டமாக உள்ளது.

பரந்தூர் திட்டத்திற்கு என்ன ஆகும்?

இதுவரை பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், தற்போது முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பால் அந்த திட்டம் மாற்று இடத்திற்கு நகர்த்தப்படுவது தெளிவாகியுள்ளது. புதிய இடத்தின் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட ஆய்வுகள் முடிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனால், சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டம் கைவிடப்படவில்லை என்றாலும், பரந்தூர் இடம் மாற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் புதிய இடத்தை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கி 5.5 கோடி பயணிகளை கையாளும் வகையில் அதன் திறனை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. கட்சித் தலைவராக விஜய் பரந்தூர் விமான நிலையம் கொண்டுவரப்படாது என அறிவித்த நிலையில், தற்போது முதலமைச்சராக அது செய்து காட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.