Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பேச்சி ஆவுடையப்பன் August 15, 2026 02:14 PM

கருப்பு படத்தில் தான் நடித்த பாடல் காட்சிகள் நீக்கப்பட்ட விஷயத்தில் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியை நடிகர் மன்சூர் அலிகான் சரமாரியாக சாடியுள்ளார். 

மைதீன் இயக்கத்தில் துஷ்யந்த் மற்றும் பிக்பாஸ் ஜனனி நடிப்பில் உருவாகியுள்ள ஆல் பாஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற  நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “நான் 1993ம் ஆண்டு ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற படத்தை 60 நடிகர்களை வைத்து எடுத்தேன். அந்த பெயர்களுக்கு முன்னால் மாண்புமிக்க என சொல்லி டைட்டில் கார்டில் போட்டு கௌரவித்தேன். அதனால் சினிமாத்துறையை கேவலமாக பேசுவதை விட்டு விட்டு கலைஞர்களை கௌரவிக்க வேண்டியது நம் கடமையாகும். 

விளம்பரங்களில் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. ஒரு படத்துக்கு ஹீரோ மட்டுமே எல்லாம் கிடையாது. விளம்பரத்துக்கு செலவு பண்ண முடிவு பண்ணிட்டீங்கன்னா கொஞ்சம் அந்த பெயர்களை பெரிதாக போட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நான் சமீபத்தில் ஒரு விஷயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

கருப்பு படத்தில் நான் நடித்தேன். நாங்க 4 பேரு எங்களுக்கு பயம் கிடையாது பாடலில் வில்லன்களுடன் இணைந்து ஆடினேன். ஆர்.ஜே.பாலாஜி என்னை புக் செய்து பாடல் பற்றியெல்லாம் சொன்னார். நானும் இதே பிரசாத் ஸ்டூடியோவில் கஷ்டப்பட்டு ஆடினேன். ஆனால் படத்தில் அப்பாடம் இடம் பெறவில்லை. யூட்யூப்பில் கூட அந்த பாடலில் கஷ்டப்பட்டு நான் ஆடிய பகுதியைக் காணவில்லை. 

ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள் என தெரியவில்லை. சூர்யா குடும்பம் நல்லா சம்பாதீங்க, அகரம் அமைப்பை நல்லா படியா கொண்டு போங்க. அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சக நடிகனின் சோற்றில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள். உங்களுக்கு ஆண்மை, தைரியம் இருந்தால் அந்த பாடலை முழுமையாக போடுங்கள். இப்போதைய முன்னணி ஹீரோக்கள் அரைக்கால் டவுசர் போட்ட காலத்திலேயே நான் தயாரிப்பாளராக இருந்தவன். இப்போது எனக்கு வயதாகி இருக்கலாம். நான் வருடத்துக்கு 4 படம் எடுக்கத்தான் போகிறேன். நல்ல கதைகளுடன் வந்தால் தயாரிப்பேன். 

ஆனால் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டால் ஆடியோ கம்பெனியிடம் பாடலை விற்று விட்டதால் இனி என்ன பண்ண முடியும் என சொல்கிறார். இது பொறுப்பற்ற பதிலாகும். நான் 350 படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கு உள்ள ஹீரோக்கள் பில்டப்பில் வாழ்ந்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான நபர்கள் உழைப்பில் உருவாகும் ஒரு படத்தை ஹீரோவுக்கான பில்டப்பாக மாற்றுகிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி என்னையெல்லாம் டம்மியாக நிற்க வைத்தார். நான் ஒன்னும் கேரக்டர் கொடு என பிச்சையெடுக்க வரவில்லை. ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்று தான் கேட்கிறேன். 

நான் அந்த நடன அமைப்புக்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன். என் பசங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.அவர்கள் ஷூட்டிங்கில் நான் நடித்ததைப் பார்த்தார்கள். இதெல்லாம் அயோக்கியத்தனம். சினிமா என்பது கூட்டு குடும்பம் என்பதை மறந்து விடாதீர்கள். இரண்டு நிமிட காட்சியாக இருந்தாலும் மக்கள் பார்க்கட்டும். ஜால்ரா போட்டு போக வேண்டும். உங்களுக்கு தானே நல்ல பெயர் வரும். உங்கள் உழைப்பை சுரண்டினால் சும்மா இருப்பீர்களா?   என காட்டமாக பேசியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.