தமிழக முதலமைச்சர் விஜய் கேட்ட ஒரே ஒரு கேள்வியால் கேரள காவல்துறை மாற்றம் கண்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா சந்தித்தார். தென்னிந்திய மாநிலங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் கேரள அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முன்னெடுப்பு திட்டமான ஆபரேஷன் தூபான் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கும் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் கேரளம் மாநிலத்தில் எனது காவல் நிலையம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா காவல் நிலையத்தில் நேற்று இதன் தொடக்கவிழா நடைபெற்றது. கேரளாவில் உள்ள அனைத்துகாவல் நிலையங்களையும் பயத்தை போக்கி பொதுமக்களுக்கு மிகவும் உகந்த இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக 63 பெண் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் விஜய் காரணமாக இருந்துள்ளார். இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அதனை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதன்படி, நான் தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது கேரளாவில் எத்தனை பெண் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார். என்னிடம் அதற்கு சிறந்த பதில் இல்லை என்பதை உணர்ந்தேன். இதனால் பதில் சொல்லவே நான் சற்று சங்கடப்பட்டேன்.
நமது மாநிலத்தில் பெண் காவல்துறை அதிகாரிகளே மிகவும் திறமையானவர்கள் என்று முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார். அவரின் பேச்சிலிருந்து உத்வேகம் பெற்று தற்போது கேரளாவில் 63 பெண் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் இருப்பதை உறுதி செய்ய நான் முடிவு செய்தேன் என ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனிதா காவல் நிலையங்கள் என்ற பெயரில் மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகிறது. 1973 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கோழிக்கோட்டில் முதல் காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆசியாவிலேயே முதல் பெண் பணியாளர்களைக் கொண்ட காவல் நிலையமாக அது திகழ்ந்தது. இதன்பின்னர். கண்ணூர், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல் நிலையங்களில் தற்போது பெண் காவலர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் என பலரும் பாராட்டியுள்ளனர்.